முதுகுளத்தூரில் உயிருடன் இருப்பவரை இறந்துவிட்டதாகக் கூறியதால், வாக்கு சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தெரு இடையர்பாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் உமர் கத்தாப் மகன் அசன் மைதீன் (47). இவர், முதுகுளத்தூரில் தேநீர் கடை நடத்தி வருகிறார். இப்பகுதியிலுள்ள 9 ஆவது வார்டில் இவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாக்குச் சீட்டு நகல் இருந்துள்ளது.
எனவே, முதுகுளத்தூரில் மறவர் தெருவில் உள்ள பெண்கள் விடுதி வாக்கு சாவடியில் நண்பகல் 12 மணிக்கு வாக்களிக்க அசன் மைதீன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள், அசன் மைதீனிடம் நீங்கள் இறந்துவிட்டதாக உங்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது என்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அசன் மைதீன், உயிருடன் உள்ளவரை எப்படி இறந்ததாகக் கூறுவீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர், முதுகுளத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, காவல் துறை அதிகாரிகளிடம் ஆலோசித்தார். இதனால், சுமார் 1 மணி நேரம் வாக்குப் பதிவு நடைபெறாமல் தாமதமானது. இது குறித்து அசன் மைதீன் கூறுகையில், கடந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் வாக்களித்தேன்.
தற்போது, இறந்துவிட்டதாகக் கூறுகின்றனர். உயிருடன் இருக்கும்போது எவ்வாறு இறந்ததாகக் கூறலாம் என்றார். இதையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் கலையரசன், தேர்தல் முடிந்த பிறகு வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று இதற்கான தகவலை பெறலாம் எனத் தெரிவித்ததை அடுத்து, அவர் வாக்களிக்காமல் அங்கிருந்து சென்றார்.