கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் சனிக்கிழமை முதல் தடை விதித்தனர்.
பருவமழை முடிந்து, கோடை தொடங்கியதையடுத்து கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால், கடந்த ஜனவரி 28-ஆம் தேதி முதல் கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். தொடர்ந்து நீர்வரத்து காணப்படாததால், 80 நாள்களுக்கும் மேலாக இத்தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன் கொடைக்கானல் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததையடுத்து அருவிக்கு நீர்வரத்து தொடங்கியது. அதே நேரத்தில், வெள்ளிக்கிழமை இரவு கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக கும்பக்கரை அருவியில் சனிக்கிழமை காலை முதல் வெள்ளப் பெருக்கு ஏற்படுமளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்தது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து 83-ஆவது நாளாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் மீண்டும் சனிக்கிழமை முதல் தடை விதித்தனர்.
மேலும், காட்டாற்று வெள்ளம் காரணமாக அருவிப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சீரமைக்கும் பணிகள் முடிவடைந்த பின் சுற்றுலா பயணிகள் அப் பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்தனர்.