முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விசாரணை ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 19) ஆஜராக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
நாளை ஆஜர்: ஆணையத்தின் விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவரது உடல்நிலை குறித்து விளக்கம் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது துறைகளைக் கவனித்தவரும், தற்போதைய துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு விசாரணை ஆணையம் அண்மையில் அழைப்பாணை அனுப்பியது. இதைத் தொடர்ந்து, அவர் சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள ஆணைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 19) ஆஜராவார் என ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.