சென்னை: ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக திங்களன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்கிறது.
சுற்றுசூழலை பாதிக்கின்ற, உயிர்வாழ்விற்கு பாதகமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தமிழக மக்கள் போராடினர். பலர் உயிர்தியாகம் செய்தனர். இதை எத்தனையும் கவனத்தில் கொள்ளாமல் பசுமைத் தீர்ப்பாயமும், வேதாந்தா நிறுவனமும் ஆலையை திறப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்திவந்தனர்.
ஆனால் தற்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், சுற்றுசூழல் பாதுகாப்பிற்குமான மிக முக்கிய தீர்ப்பாக அமைந்துள்ளது.
ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் புதிய மனுதாக்கல் செய்துள்ளது. இதனையும் நீதிமன்றம் நிராகரித்து ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும், போராடிய அனைவர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.