ஆம்பூர் அருகே வனப்பகுதியில் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் மற்றும் சிறப்பு இலக்குப் படையினர் திங்கள்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆம்பூர் வனச்சரகத்தில் சாரங்கல் முதல் மாதகடப்பா வரை ஆந்திர மாநிலம், கெளண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம், காப்புக் காடுகளை ஒட்டி துருகம் காப்புக்காடுகள் மற்றும் ஊட்டல் காப்புக்காடுகள் உள்ளன. ஆந்திர வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் தீவிரவாதிகள் நடமாட்டம், சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளதா? என அவ்வப்போது நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் வனத் துறையினருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக காடுகளில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாகவும், அமிர்தி காப்புக் காடு பகுதியில் அரியவகை விலங்குகளை கூட்டாக வேட்டையாடியதாகவும் சமூக விரோதிகளைப் பிடித்து விசாரித்து வருவதாகவும் நாளேடுகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்தன.
மேலும், தற்போது காப்புக் காடுகளில் புளி மகசூல் காலம் என்பதால், புளி சாகுபடி செய்யும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், ஒப்பந்ததாரரின் காவல்காரர்கள் என்ற போர்வையில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம், துப்பாக்கிகள் சப்தம் கேட்பதாகவும் வனத் துறையினருக்கு இப்பகுதி மக்கள் தகவல் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் வனவர் கருணாமூர்த்தி தலைமையில் சிறப்பு இலக்குப் படையினர், நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார், வனக் காப்பாளர்கள் சுரேஷ், விஸ்வநாதன் உள்ளிட்ட வனத் துறையினர் 20-க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் காப்புக்காடு பகுதியில் திங்கள்
கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
முதல் நாள் தேடுதல் வேட்டையின்போது, சாரங்கல், குந்தேலிமூலை, கத்தாழை குழி, பாம்பு ஜொனைக் கெட்டு, சாரமலை கானாறு, ஆலமரத்துக் குழி, குண்டிப்புலியான் பாறை, கொய்யா மரத்து சதுரம், ஒக்கலக்கெட்டு, கரடிக்குட்டை, துலுக்கன் கானாறு, ஜம்பூட்டல் வழியாக ஊட்டல் தேவஸ்தானத்தில் நிறைவடைந்தது.
இதையொட்டி, குந்தேலிமூலை பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.