இரட்டை இலை தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு: டிடிவி  தினகரன் அறிவிப்பு 

அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 
இரட்டை இலை தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு: டிடிவி  தினகரன் அறிவிப்பு 

சென்னை: அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் அணிக்கு அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 23-இல் உத்தரவு பிறப்பித்தது. 

இதற்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா ஆகியோர் சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்கரா ஷேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட  நீதிபதிகள், எழுத்துப்பூர்வமான வாதங்களை  ஒரு வாரத்துக்குள் சமர்பிக்க உத்தரவிட்டதுடன்,  வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்கரா ஷேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழன் பிற்பகல் 2.25 மணிக்கு தீர்ப்பு வழங்கினர்.

தீர்ப்பில் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் தில்லி உயர்நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையிலான அதிமுக அணிக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக வியாழனன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்த தீர்ப்பை எதிர்த்து கண்டிப்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் சுயேட்சையாக எங்கள் வேட்பாளர் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார்கள்.

தேர்தலில் அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம். குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com