கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோபிளேன் ஓட்டுதுனு சொல்லுவாங்களாம் என்று கொடநாடு விடியோ தொடர்பாக முதல்வர் பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை பூவிருந்தவல்லி எம்ஜிஆர் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதன் சுருக்கம்,
"மக்களுக்காக வாழ்ந்து ஒய்ந்த தலைவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா. இரண்டாக உடைந்த கம்யூனிஸ்ட் கட்சிகளே ஒன்றாக இணையவில்லை. ஆனால், அதிமுக மீண்டும் ஒன்றாக இணைந்தது.
நான் எதற்கும் அஞ்சமாட்டேன். கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை அதிமுகவுக்கு விஸ்வாசமாக இருப்பேன்.
ஜெயலலிதா மறைந்த பிறகு கொடநாடு எஸ்டேட் தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கொடநாடு கொள்ளை சம்பவத்தை கூலிப்படையினர் தான் செய்தனர். ஏற்கனவே, அந்த குடும்பத்தினர் (சசிகலா குடும்பத்தினர்) நிறைய பிரச்னைகளை உண்டாக்குகின்றனர். அப்படி இருக்கையில், கொடநாடு விஷயத்தில் ஆதாரம் இருந்தால் அவர்கள் எங்களை சும்மா விடுவார்களா?
தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரின் பேட்டி திமுகவின் நாடகம். இதனை சட்டப்படி எதிர்கொண்டு தவிடுபொடியாக்கி காட்டுவேன்.
சயான் மற்றும் மனோஜ்-க்கு திமுகவினர் தான் ஜாமீன் எடுத்துள்ளனர்.
இந்த விஷயத்தில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்குவது பொறுக்க முடியாத காரணத்தால் இதுபோன்ற பொய் வழக்குகள் போடப்படுகிறது.
கொள்ளை சம்பவம் எப்படி செய்தோம் என்பதை தெரிவித்த கூலிப்படையினர் மீது கேரளாவில் வழக்குகள் உள்ளன.
இந்த விஷயத்தில் என்னை தொடர்புபடுத்துவது, கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோபிளேன் ஓட்டுதுனு சொல்லுவாங்களாம் என்பது போல் உள்ளது" என்றார்.