ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி பகுதிக்கு ஆஸ்திரேலிய நாட்டு பிளமிங்கோ பறவைகள் வரத் தொடங்கியுள்ளன.
தனுஷ்கோடிமன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பிளமிங்கோ பறவைகள் இனப்பெருக்கத்துக்காக அதிகளவில் வரும். இப்பறவைகள் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் இங்கு குவியும். இந்நிலையில், இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன. 20) ஆஸ்திரேலியாவில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளமிங்கோ பறவைகள் வந்துள்ளன. தற்போது இப்பறவைகள் கோதண்டராமர் கோயில், அரிச்சல்முனை, கம்பிபாடு உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த ஆழம் கொண்ட கடல் பகுதியில் மீன்கள், இறால் மீன்களை உணவாக வேட்டையாடி வருகின்றன.
இந்த ஆண்டு பிளமிங்கோ பறவைகளின் வருகை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு பறவைகளை காண தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.