சென்னை: வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளைக் களைய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், 3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும் 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
போராட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அப்போது, நீதிபதிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடப்படுவதாக அறிவித்தனர். அதன் பின்னர், அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காததை அடுத்து, இன்று முதல் மீண்டும் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கி ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார் செங்கோட்டையன்.