சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அரசு நிதியில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க தடையில்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
மேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் முன்பே, ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் குற்றவாளி இல்லை என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
சென்னை மெரினாவில் தமிழக அரசின் நிதியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து வழக்குரைஞர் எம்.எல். ரவி தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.
மறைந்த ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் தமிழக அரசு ரூ.50 கோடியில் நினைவிடம் அமைக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து நீதிபதிகள் கூறுகையில், எதிர்காலத்தில் பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். அரசின் கொள்கை முடிவுகள் தமிழக மக்களின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளுக்கானதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
மேலும், ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல என்பதால், மெரினாவில் நினைவிடம் கட்ட தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.