வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத திருவள்ளூர் மாவட்ட டி.எஸ்.பி.க்கு விழுப்புரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிடி ஆணை பிறப்பித்தது.
விழுப்புரம் மாவட்டம், மணலூர்பேட்டை அருகேயுள்ள கள்ளப்பாடி என்ற கிராமத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு சாராய வியாபாரியை கைது செய்து அழைத்து வந்த போலீஸாரை சிலர் தாக்கி, சாராய வியாபாரியை விடுவித்து அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், அப்போது அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளராக இருந்த ராஜா உள்பட 19 பேர் சாட்சிகளாக உள்ளனர். இவ்வழக்கின் விசாரணைக்கு காவல் ஆய்வாளர் ராஜா முறையாக ஆஜராகாமல் இருந்து வந்தாராம். இது தொடர்பாக பல முறை சம்மன் அனுப்பியும் வரவில்லையாம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு விழுப்புரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஜமுனா முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணைக்கு ஆஜராகாத அப்போதைய அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளரும், தற்போது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் டி.எஸ்.பி.யாக பணிபுரிபவருமான ராஜாவுக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.