ஈரோடு: பூட்டிய அறையில் சிக்கிய எலி போல இருக்கிறார் பிரேமலதா என்று தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏவும், தற்போது திமுகவில் இருப்பவருமான சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொருளாளரான பிரேமலதா வெள்ளியன்று கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேமுதிக சார்பில் அதிமுக மற்றும் திமுகவின் துரைமுருகனுடன் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து செய்தியாளர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
இதனால் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிதானம் தவறிய பிரேமலதா பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசினார். அத்தத்துடன் மிகவும் அலட்சியமாகவும் எள்ளல் தொனியுடனும் பதிலளித்தார். அவரது இந்த நடவடிக்கைக்கு அங்கு கூறியிருந்த பத்திரிகையாளர்கள் கண்டனக் குரல் எழுப்பினார்கள்.
இந்நிலையில் பூட்டிய அறையில் சிக்கிய எலி போல இருக்கிறார் பிரேமலதா என்று தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏவும், தற்போது திமுகவில் இருப்பவருமான சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டப்பேரவையின் போது தேமுதிக கொறடாவாக இருந்தவர் சந்திரகுமார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். அப்போது தேர்தல் சமயத்தில் மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர், திமுகவில் சேர்ந்தார்.
தற்போது சர்ச்சைக்குரிய பிரேமலதாவின் செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு அவர் கூறியதாவது:
பிரேமலதா விஜயகாந்த் பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல பேசி, பத்திரிகையாளர்களை கேவலப்படுத்துகிறார்
கருணாநிதியை சந்திக்க ஸ்டாலின் அனுமதி மறுத்ததாக திரும்ப திரும்ப பொய் கூறி வருகிறார் பிரேமலதா
பூட்டிய அறையில் சிக்கிய எலி போல பிரேமலதா விஜயகாந்த் விரக்தியில் இருக்கிறார்
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் 45 நிமிடங்கள் அமர்ந்து பேசிவிட்டு, அதை தற்போது மறுக்கிறார்கள்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.