சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தான் கேட்ட சீட் கிடைக்காத அதிருப்தியில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தரத் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளை வகித்தவர் ராஜகண்ணப்பன்.
பின்னர் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் காங்கிரசின் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிட்ட அவர் 3,354 ஓட்டுகள் வித்தியாசத்தில் நூலிழையில் தோற்றார்.
தற்போது 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் அல்லது மதுரை தொகுதியை அவர் எதிர்பாத்துக் காத்திருந்தார். ஆனால் அதிமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. மதுரை தொகுதி ராஜகண்ணப்பனனுக்கு கிடைக்கக் கூடாது என்று சில அதிமுக அமைசசர்கள் லாபி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சீட் கிடைக்காத அதிருப்தியில், ராஜகண்ணப்பன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தரத் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திங்கள் மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் என்றும், அப்போது அவர் தனது ஆதரவைத் தெரிவித்து திமுகவால் இணைவார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.