காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் இயங்கி வரும் கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வுச் சங்கத்துக்கு வாகனத்தை நன்கொடையாக நடிகர் விஜய் சேதுபதி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வுச் சங்கத்தில் பணியாற்றி வருபவர் பச்சையம்மா. கொத்தடிமைத் தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட இவர், அண்மையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்தபோது, தங்களது சங்கம் குறித்த தகவலைத் தெரிவித்தாராம். இதையடுத்து, சங்க அலுவலக கட்டடத்துக்கு ரூ. 5 லட்சத்தை, நடிகர் விஜய் சேதுபதி வழங்கினார். இந்நிலையில், கொத்தடிமைத் தொழிலாளர் மீட்புப் பணிக்கு பயன்படும் வகையில், சொகுசுக் கார் ஒன்றை, கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வுச் சங்க உறுப்பினர்களிடம் நடிகர் விஜய் சேதுபதி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.