தென்னிந்தியாவில் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத்தான் சர்க்கரை நோய் பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவமனை மற்றும் பேராசிரியர் விஸ்வநாதன் ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன் கூறியதாவது:
சர்க்கரை நோயானது தற்போது உயிர்க்கொல்லி நோயாக உருவெடுக்கும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 6.5 கோடி பேரும், உலகம் முழுவதும் 40 கோடி மக்களும் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். சர்க்கரை நோயாளிகள் விழித்திரை பாதிப்பு, உயர் ரத்த அழுத்த பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.
சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு மனது மற்றும் உணர்வு சார்ந்த பிரச்னைகள் முக்கியக் காரணமாக விளங்குகின்றன. இந்நிலையில் அந்நோய் தொடர்பாக விரிவான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. சுமார் 400-க்கும் மேற்பட்டவர்களிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்த விவரங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
அதில், ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிக அளவில் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 55 சதவீத பெண்களுக்கு சர்க்கரை நோய் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
அதேபோன்று, 22.5 சதவீத ஆண்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உரிய விழிப்புணர்வும், புரிதலும் அவசியம் என்றார் அவர்.