சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எஸ். திருநாவுக்கரசர் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சு.திருநாவுக்கரசர்,
சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். திருச்சி மக்களவை தொகுதியில் வருகிற மார்ச் 25ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி விரைவில் மீண்டும் தமிழகம் வருவார். மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்ட காரணத்தால், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தேனி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். பாஜக தலைமையிலான கூட்டணி, கடந்த 5 ஆண்டுகளாக ஒரு மோசமான ஆட்சியை தான் கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.