உள் தமிழகத்தில் சில இடங்களில் திங்கள்கிழமை வழக்கத்தை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: தமிழகம், புதுச்சேரியில் திங்கள்கிழமை வறண்ட வானிலை நிலவும். உள் தமிழகத்தில் சில இடங்களில் திங்கள்கிழமை (மார்ச் 25) வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.
சென்னையில் காலை வேளையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். அதிகபட்சமாக 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
7 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வெயில் அதிகமாக இருந்தது. குறிப்பாக, 7 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக மதுரை விமானநிலையம், சேலத்தில் தலா 103 டிகிரி வெப்பநிலை பதிவானது. திருத்தணியில் 102 டிகிரியும், கோயம்புத்தூர், தருமபுரி, வேலூரில் தலா 101 டிகிரியும், பாளையங்கோட்டையில் 100 டிகிரியும் பதிவானது.