"ஒரு செருப்பு வந்து சேர்ந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்' என காந்தியடிகளுக்கு நேர்ந்த சம்பவத்தை குறிப்பிட்டுக் காட்டி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, "சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே' என்றார். அவரது இந்தப் பேச்சு தேசிய அளவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அவர் முன்ஜாமீன் கேட்டு, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, இரண்டு நாள்கள் அவர் பிரசாரம் செய்யவில்லை. பின்னர் அவர் தனது பிரசாரத்தை மீண்டும் தொடங்கிய போது சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி, கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. அதே சமயம், திருப்பரங்குன்றத்தில் கடந்த வியாழக்கிழமை (மே 16) இரவு கமல்ஹாசன் பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், மேடையை நோக்கி ஒற்றை செருப்பு, முட்டை ஆகியவை வீசப்பட்டன.
இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள "ஒத்த செருப்பு' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியது:
ஒருமுறை ரயில் பயணத்தின்போது தனது ஒரு செருப்பு தவறி கீழே விழுந்ததால் யாருக்கேனும் பயன்படட்டும் என்று தனது மற்றொரு செருப்பையும் கழற்றி வீசினார் காந்தி. நான் காந்தியின் ரசிகன். அவர் கழற்றி வீசிய ஒரு செருப்பு வந்து சேர்ந்துவிட்டது; இன்னொரு செருப்பும் வரும். அதற்காக காத்திருக்கிறேன். நான் காந்தியின் ரசிகன் என்பதால், அந்த அருகதை எனக்கு உண்டு. இதில் எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை. என் மீது செருப்பு வீசியவருக்குதான் அவமானமே தவிர எனக்கு அல்ல என்றார் கமல்ஹாசன்.
விழாவில் இயக்குநர்கள் ஷங்கர், பாக்யராஜ், லிங்குசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.