கர்த்தர் ஆதாம் ஏவாளை படைத்து சகல ஜீவ ராசிகளையும் தாவர வகைகளையும் உணவாகக் கொடுத்தார். இவ்வுடல் உண்டு புஷ்டியாயிருந்து உடல் பலம் கொண்டு தம் பணிகளை செய்ய கர்த்தர் கொடுத்தார். ஆகவே, நாம் உயிர் வாழ நல்ல உணவுகளையும் ஏற்ற காலங்களில் மழையையும் நீர் ஊற்றுகளையும் தந்துள்ளார்.
நம் ஆன்மாவுக்கு உணவு இயேசுவே. "வானத்திலிருந்து இறங்கின அப்பம் நானே!' என்கிறார். ஆன்மாவுக்கு மனிதன் தினமும் உணவளிக்க வேண்டும். "" ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக் கடவன்'' (யோவான் 7: 37) நம் உடலுக்கு நல்ல உணவளிக்கிறோம். ஆனால், (உயிருக்கு) ஆன்மாவுக்கு உணவளிப்பது இல்லை. எனவே, உடல் புஷ்டியாயும் ஆன்மா மெலிந்தும் காணப்படுகிறது. ஆதலால் நம் உள்ளத்தில் இறைவன் வாழாமல் தீயோன் வாழ இடம் தருகின்றோம். இதனால் ஆன்மா, வறுமை, ஏழ்மை, தீய செயல்கள், ஆகாமிய வாழ்வு இவற்றால் துன்பப் படுகிறது.
ஆன்மாவுக்கு உணவளிப்பது எப்படி எனில் ஜெப வாழ்வு வாழ்தல், நம்முன்னோர் இறைவனை அந்தி, சந்தி, மத்தியானம், நடு இரவுகளில் எழுந்து ஜெபித்தார்கள்; ஆன்ம பலம் பெற்றார்கள்.
கடவுளை தியானம் செய்து மனதில் நினைத்து நினைத்து அவன் புகழ் சொல்லி மகிழ்ந்தார்கள். அவர்கள் ஆன்மா பலமுள்ளதாயிருந்தது.
கடவுளின் கட்டளைகளைக் கைக்கொள்ளுதல் உயிருக்கு உணவு ஆகும். சன்மார்க்க வாழ்வு உயிருக்கு உணவு ஆகும். பிறருக்கு சேவை செய்தால் ஆன்மா உணவு பெறும். நல்ல இறை மகனாய் சாட்சி உள்ள வாழ்வு கடமைகளைச் செய்தல் உயிருக்கு உணவளிப்பது ஆகும்.
ஆலயம் சென்று இறைவனை தொழுதால் ஆன்மா பலம் அடையும். பெற்றோரை கனம் பண்ணுதல் ஆன்மாவுக்கு உணவளிப்பது ஆகும். மொத்தத்தில் இறைவனை சார்ந்த வாழ்வு ஆன்மாவுக்கு உணவளிக்கும் வாழ்வு. இறைவனை சார்ந்து நாம் உடலுக்கு நல்ல உணவளிப்போம். உயிருக்கும் உணவளித்து உடலையும் ஆன்மாவையும் புஷ்யாக வைத்திருப்போம். உயிருக்கு உணவாகும் இயேசுவை போற்றுவோம்.