கஷோகி படுகொலை குறித்து ஓரிரு நாள்களில் அறிக்கை: டிரம்ப் திட்டவட்டம்

செய்தியாளர் கஷோகி படுகொலை தொடர்பான அமெரிக்கப் புலனாய்வு விவரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிடவிருப்பதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கஷோகி படுகொலை குறித்து ஓரிரு நாள்களில் அறிக்கை: டிரம்ப் திட்டவட்டம்

செய்தியாளர் கஷோகி படுகொலை தொடர்பான அமெரிக்கப் புலனாய்வு விவரங்கள் அடங்கிய அறிக்கையை செவ்வாய்க்கிழமைக்குள் (நவ. 20) வெளியிடவிருப்பதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
துருக்கியிலுள்ள சவூதி துணைத் தூதரகத்தில் நடைபெற்ற அந்தப் படுகொலையில், "சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு உள்ளதாக அமெரிக்காவின் சிஐஏ புலனாய்வு அமைப்பு முடிவுக்கு வந்துள்ளது' என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, கலிஃபோர்னியாவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடச் சென்ற அதிபர் டிரம்ப், அங்கு செய்தியாளர்களிடம் கூறிய
தாவது:
செய்தியாளர் கஷோகி படுகொலை மிகவும் கோரமான சம்பவம் ஆகும். செய்தியாளர்கள் ஒருபோதும் கொல்லப்படக் கூடாது.
கஷோகி படுகொலை தொடர்பாக சிஐஏ அதிகாரிகள் இன்னும் இறுதியான முடிவுக்கு வரவில்லை. அதற்குள், அந்தப் படுகொலைக்கு சவூதி இளவரசர்தான் காரணம் என்று சிஐஏ முடிவுக்கு வந்துள்ளதாக இப்போதே கூற முடியாது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகளுடன் பேசுவேன். இதுதொடர்பான முழுமையான அறிக்கை திங்கள்கிழமை (நவ.19) அல்லது செவ்வாய்க்கிழமை (நவ.20) வெளியிடப்படும்.
அந்த அறிக்கையில், கஷோகி படுகொலைக்கு உத்தரவிட்டவர்கள் யார், அந்த உத்தரவை செயல்படுத்தியது யார், அந்தப் படுகொலை சம்பவத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்  என்றார் அவர்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் "வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்த அவர், சவூதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, அந்த நாட்டுச் சட்டப்படி அவரது முன்னாள் மனைவியிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றதற்கான சான்றுகள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த மாதம் 2-ஆம் தேதி சென்றார். ஆனால், அதன் பிறகு அவரைக் காணவில்லை.
தூதரகத்துக்குள் அவரை சவூதி அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் மறுத்து வந்த சவூதி அரேபியா, 18 நாள்களுக்குப் பிறகு தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி கொல்லப்பட்டதை  ஒப்புக் கொண்டது.
இந்த நிலையில், கஷோகி படுகொலை தொடர்பாக சவூதியில் நடைபெற்று வந்த வழக்கில் 11 பேரைக் குற்றவாளிகளாக அந்த நாட்டு நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.
அவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் படுகொலையில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பில்லை எனவும், சவூதி புலனாய்வு அமைப்பின் துணைத் தலைவர் அகமது அல்-அஸிரியும், கஷோகியுடன் "பேச்சுவார்த்தை' நடத்துவதற்காக விமானம் மூலம் துருக்கி சென்ற குழுவின் தலைவரும்தான் கஷோகியைக் கொல்ல உத்தரவிட்டனர் என்றும் சவூதி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தப் படுகொலையில் சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்புள்ளது என, அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏ-வின் விசாரணை முடிவுகள் தெரிவிப்பதாக "வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கே டிரம்ப் இவ்வாறு பதிலளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com