சியோல்: ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் லீ ம்யூங் பாக்கிற்கு 15 ஆண்டு சிறைதணடனையும், ரூ. 8 கோடி அபராதமும் விதித்து தென்கொரிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
2008-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை தென் கொரிய அதிபராக இருந்தவர் லீ ம்யூங் பாக். இவர் தனது ஆட்சிக்காலத்தில் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அதிலும் குறிப்பாக அவரது சகோதரர் பெயரில் இயங்கி வந்த DAS எனும் நிறுவனத்தில் போலி கணக்குகளை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது பலத்த குற்றசாட்டு எழுந்தது. அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் லீ ம்யூங் பாக்கிற்கு 15 ஆண்டு சிறைதணடனையும், ரூ. 8 கோடி அபராதமும் விதித்து தென்கொரிய நீதிமன்றம் வெள்ளியன்று தீர்ப்பளித்துள்ளது
வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நான்காவது அதிபர் லீ ம்யூங் பாக் என்பது குறிப்பிடத்தக்கது.