வட அயர்லாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் (56), இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரிட்டனின் ஓர் அங்கமான அந்த தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, இந்த பரிசு வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், வடக்கு அயர்லாந்தில் அரசியல் குழப்பம் நிலவி வந்த காலகட்டத்தில், திருமணமான ஒருவர் மீது இளம் பெண் ஒருத்தி காதல் வயப்படுவதைக் கருவாகக் கொண்டு அன்னா பர்ன்ஸ் எழுதிய மில்க்மேன் (பால்காரர்) என்ற நாவலுக்காக, அவருக்கு புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புக்கர் தேர்வுக் குழு தெரிவித்துள்ளதாவது:
வன்முறை, பாலியல் கொடுமைகள் நிறைந்த அரசியல் காலகட்டத்தை, நகைச்சுவை இழையோட அன்னா பர்ன்ஸ் விவரித்திருக்கிறார். அந்த நாவலின் வியக்கத்தக்க வகையிலான தனித்துவத்துக்காகவே அதற்கு புக்கர் பரிசு வழங்கப்படுகிறது என்று தேர்வுக் குழு விளக்கமளித்துள்ளது.