வாஷிங்டன்: தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தானுக்கான ரூ 2000 கோடி உதவித் தொகையை ரத்து செய்வது என்று அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடர்ந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதலாவதாக கடந்த வருடம் ஆகஸ்டில் டிரம்ப் புதிய தெற்காசிய கொள்கையை வெளியிட்டார். அதில் அந்த பிராந்தியத்தில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கும்படி பாகிஸ்தானைக் கேட்டு கொண்டார்.
தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தலீபான் குழுக்கள் மற்றும் ஹக்கானி நெட்வொர்க் ஆகிய தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தானில் புகலிடம் அளித்து, அவர்களுக்கு எதிராக எந்தவிட நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி, இந்த வருடம் ஜனவரியில் பாகிஸ்தானின் பாதுகாப்பு தளவாடங்கள் வாங்குவதற்காக வழங்க இருந்த 115 கோடி அமெரிக்க டாலர் உதவித் தொகையும் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தானுக்கான ரூ 2000 கோடி உதவித் தொகையை ரத்து செய்வது என்று அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.
முன்னரே அறிவித்திருந்த அமெரிக்காவின் தெற்காசிய கொள்கைக்கு ஆதரவான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.