யங்கூன்: அரசின் ரகசிய சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டி ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் இருவருக்கு மியான்மர் நீதி மன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.
மியான்மரில் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ரோஹிங்யா சிறுபான்மையினருக்கு எதிரான கலவரத்தின் பொழுது, ரஹின் மாகாணத்தில் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் வா லொன்(32) மற்றும் க்யூ ஸோ ஓஓ இருவரும் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வநதார்கள். அப்பொழுது அந்தப் பகுதியில் ராணுவம் நிகழ்த்திய கொடூர தாக்குதல்களைப் பற்றித் தொடர்ந்து எழுதி வந்தார்கள்.
பின்னர் கடந்த வருடம் டிசம்பர் மாதம், 12-ஆம் தேதி அவர்களிருவரும் காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து ரகசிய ஆவணங்களை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டனர். பின்னர் இதுவரை பிணையில் கூட விடுவிக்கப்படாமல், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கானது பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதலாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அரசின் ரகசிய சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டி ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் இருவருக்கு மியான்மர் நீதி மன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கியு ள்ளது.
வழக்கினை விசரித்து வந்த மியான்மரின் யங்கூன் வடக்கு மாவட்ட நீதிபதி ஏய் வின், 'அரசாங்க ரகசிய சட்டங்களை மீறி ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் வா லொன்(32) மற்றும் க்யூ ஸோ ஓஓ,( 28) இருவரும் ரகசிய ஆவணங்களை சேகரித்து உள்ளனர்' என உறுதி செய்தார்.
அத்துடன் குற்றவாளிகள் அரசு ரகசிய சட்ட பிரிவு 3.1(சி)-யை மீறி உள்ளதால் அவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அதே நேரம் டிசம்பர் 12 ல் இருந்து குற்றவாளிகள் ஏற்கனவே சிறையில் அடைக்கபட்ட காலம் கருத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ராய்ட்டர்ஸ் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் ஜே அட்லெர் கூறியதாவது:
இன்று மியான்மரில் ஒரு சோகமான நாள். ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் வா லொன் மற்றும் க்யூ ஸோ ஓஓ இருவருக்கு மட்டும் அல்ல, உலகம் முழுவதும் உள்ள செய்தி ஊடகங்களுக்கும்தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.