கழுத்தில் கத்தியை வைத்து பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது!: அமெரிக்காவிடம் சீனா கண்டிப்பு

கழுத்தில் கத்தியை வைப்பது போல் கடுமையான வரிவிதிப்புகளை அறிவித்துவிட்டு அமெரிக்கா எங்களை வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது
கழுத்தில் கத்தியை வைத்து பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது!: அமெரிக்காவிடம் சீனா கண்டிப்பு


கழுத்தில் கத்தியை வைப்பது போல் கடுமையான வரிவிதிப்புகளை அறிவித்துவிட்டு அமெரிக்கா எங்களை வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது என்று சீனா கண்டிப்பாகத் தெரிவித்துள்ளது.
20,000 கோடி டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.14.52 லட்சம் கோடி) சீனப் பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்த நிலையில், சீன வர்த்தகத் துறை இணையமைச்சர் வாங் ஷோவென் இவ்வாறு கூறியுள்ளார். 
இது குறித்து அவர் தலைநகர் பெய்ஜிங்கில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென்றால், அந்த நாடுகள் ஒன்றையொன்று சம அளவில் மதிக்க வேண்டும்.
ஆனால், அமெரிக்காவைப் பொருத்தவரை கடுமையான வரி விதிப்புகள் மூலம் சீனப் பொருள்கள் மீது அந்த நாடு மிகப் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இது, எங்கள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுவது போல் உள்ளது. இத்தகைய சூழலில், எங்களால் எப்படி அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும்? 
எங்களை அமெரிக்க நிதியமைச்சர் ஸ்டீவன் நுச்சின் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். ஆனால் இப்போதுள்ள சூழலில், எங்களால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது.
ஏற்கெனவே, இரு தரப்பினரும் நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வர்த்தகம் குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இருந்தாலும், சீனப் பொருள்கள் மீது அடுத்தடுத்து கூடுதல் வரி விதிப்புகளை அறிவித்ததன் மூலம் அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தைக் கைவிட்டது என்று அவர் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து வர்த்தகத் துறையின் மற்றோர் இணையமைச்சர் ஃபு ஷியிங் கூறுகையில், அமெரிக்காவுடன் நியாயமற்ற முறையில் சீனா வர்த்தகம் மேற்கொள்வதாக அந்த நாட்டுத் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனினும் இது உண்மைக்குப் புறம்பானதாகும். 
ஒவ்வோர் ஆண்டும், 70,000 டாலர் (சுமார் ரூ.50.83 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அமெரிக்கா 50,000 கோடி டாலர் (சுமார். ரூ.36.31 லட்சம் கோடி) லாபம் ஈட்டி வருகிறது என்றார் அவர்.
சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பைவிட, அந்த நாட்டிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்களின் மதிப்பு அதிகமாக இருப்பதால், அந்த வர்த்தகப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக சீனப் பொருள்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்போவதாக கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு போன்ற உலோகப் பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கும் உத்தரவை அவர் பிறப்பித்தார்.
மேலும், சுமார் 6,000 கோடி டாலர் (ரூ.3.9 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டார்.
இதற்குப் பதிலடியாக, 300 கோடி டாலர் (ரூ.19,500 கோடி) மதிப்பு கொண்ட 128 வகை அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப் போவதாக சீனாவும் அறிவித்தது. இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் வெடிக்கும் என்று அச்சம் எழுந்தது.
அதையடுத்து, வர்த்தகப் போரைத் தவிர்ப்பதற்காக, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனிலும், சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலும் இரு நாட்டு அதிகாரிகள் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், வேளாண்மை, எரிசக்தி போன்ற துறைகளில் வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவது குறித்து கருத்தொற்றுமை ஏற்பட்டது. எனினும், இதுதொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 5,000 கோடி டாலர் மதிப்பிலான பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.
சீனாவின் தொழில்நுட்பத் திருட்டு, முறையற்ற வணிகக் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த அறிவிப்புக்குப் பதிலடியாக, அதே மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிப் பொருள்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்தது.
இந்தச் சூழலில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி 3,400 கோடி டாலர் மதிப்பிலான சீனப் பொருள்கள் மீது 25 சதவீத கூடுதல் வரி கடந்த மாதம் அமலுக்கு வந்தது.
இதையடுத்து, அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் வெடிக்கும் என்று அஞ்சப்பட்டது.
இந்தச் சூழலில், மேலும் 20,000 கோடி மதிப்பு கொண்ட சீனப் பொருள்கள் மீதான வரியை 25 சதவீதமாக உயர்த்துவதாக டிரம்ப் கடந்த வாரம் அறிவித்தார்.
அந்த அறிவிப்பு திங்கள்கிழமை அமலுக்கு வந்த நிலையில், சீன வர்த்தகத் துறை இணையமைச்சர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com