புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாருக்கு எதிராக ஐ.நா.வில் விரைவில் தீர்மானம் கொண்டு வருவதற்கு பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.
ஐ.நா.வில் மசூத் அஸாருக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தில் பிரான்ஸ் பங்கு வகிப்பது இது 2ஆவது முறையாகும். இதற்கு முன்பு, பிரிட்டன், பிரான்ஸ் ஆதரவுடன் அமெரிக்கா கடந்த 2017ஆம் ஆண்டில் ஐ.நா. நடவடிக்கை குழுவில் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அதற்கு வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா முட்டுக்கட்டை போட்டது. இதனால் அந்த தீர்மானம் தோல்வியடைந்தது.
இந்நிலையில், பிரான்ஸ் தற்போது தீர்மானம் கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் அரசு மூத்த அதிகாரிகள் வட்டாரங்கள், பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அஸாரை சேர்ப்பது தொடர்பாக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வர பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. இன்னும் சில நாள்களில் அது கொண்டு வரப்படும் என்றார்.
பிரான்ஸ் முடிவு குறித்து, அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் பிலிப் எடின், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரிடையே செவ்வாய்க்கிழமை காலை ஆலோசனை நடைபெற்றுள்ளது. அஜித் தோவாலை செவ்வாய்க்கிழமை காலையில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட எடின், இந்த விவகாரத்தில் ராஜீய ரீதியில் நடவடிக்கை எடுப்பதில் இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.