சீனாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை தொடரும்: டிரம்ப் நம்பிக்கை
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு பல கோடி டாலர் அளவுக்கு வரி விதிப்பதாக அமெரிக்க அறிவித்தது. இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் பதற்றம் ஏற்பட்டது. இது, சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.
வர்த்தக பதற்றத்தை குறைக்கும் வகையில் இருநாட்டு அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில் வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
சீனப் பிரதிநிதிகளிடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை மிகச் சிறப்பான வகையில் அமைந்திருந்தது. இருதரப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
வரி விதிப்புக்கான காலக்கெடுவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் நிலையில், இந்த காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
அமெரிக்கா-சீனா இடையிலாக கடந்த ஏழு மாதங்களாக நீடித்து வரும் வர்த்தகப் போர் பதற்றத்தை முடிவுக் கொண்டு வரும் வகையில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரும் மார்ச் மாதத்தில் சந்தித்துப் பேச அதிக வாய்ப்புகள் உள்ளது என்றார் அவர்.
சீன அதிபர் கடிதம்: வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக சீன அதிபர் ஷி ஜின்பிங் , அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:
உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடுகளான அமெரிக்கா-சீனா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் இருதரப்பும் பயன்பெறும் வகையிலான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஷி ஜின்பிங் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.