ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் வங்கியில் புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றதாக 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து பால் ரிவர் போலீஸார் கூறியதாவது: பால் ரிவர் நகரிலுள்ள பேகோஸ்ட் வங்கிக் கிளையில் புதன்கிழமை மாலை புகுந்த 14 வயது சிறுமி, திடீரென துப்பாக்கியை காட்டி, வங்கியில் இருந்த அனைவரையும் மிரட்டினார். பின்னர், வங்கியின் காசாளரிடம் சென்று பணத்தை எடுத்து தருமாறு கூறி,
துப்பாக்கியை காட்டி மிரட்டினார். அவரிடமிருந்து பணத்தை கொள்ளையடித்த அந்தப் பெண் வங்கியைவிட்டு வெளியே வந்து, தயாராக நின்றிருந்த காரில் ஏறிச் சென்றார். அந்தக் காரை 15 வயதுடைய மற்றொரு பெண் ஓட்டிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
வங்கிக்கு வெளியே பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்வையிட்ட போலீஸார் அந்தக் காரின் பதிவெண்ணைக் கொண்டு புலன் விசாரணை நடத்தினர்.
பின்னர் அந்தப் பெண்கள் வசித்த இடத்தை அடைந்து, இருவரையும் கைது செய்தனர். வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டது. ஆனால், அவ்விரு பெண்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸார் வெளியிட மறுத்துவிட்டனர்.