ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து, அவரது மகள் மரியம் நவாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனது தந்தை நவாஸ் ஷெரீஃபின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர் தற்போது லாகூரிலுள்ள பஞ்சாப் இருதய நோய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (பிஐசி) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரைக் காண அந்த மருத்துவமனைக்குச் செல்ல நான் விரும்பினேன். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு வர வேண்டாம் என்று எனது தந்தை மறுத்துவிட்டார்.
அவரது உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கை எங்களுக்கு தரப்படவில்லை. இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகளிடமும், பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சகத்திடமும் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்தப் பலனுமில்லை என்றார் அவர்.
பனாமா ஆவண முறைகேடுகள் தொடர்பாக, லண்டன் அவென்
ஃபீல்டு ஊழல் வழக்கு, அல்-அஜீஸா உருக்காலை வழக்கு, ஃபிளாக்ஷிப் இன்வெஸ்ட்மென்ட் நிறுவன வழக்கு ஆகிய மூன்று வழக்குகள் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது பதிவு செய்யப்பட்டன.
அவற்றில், அவென்ஃபீல்டு ஊழல் வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன் காரணமாக, கடந்த கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் நவாஸ் ஷெரீஃப் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், அவென்ஃபீல்டு ஊழல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் நிறுத்திவைத்தது. அதையடுத்து, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்தச் சூழலில், நவாஸ் மீது ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அல்-அஜீஸா முறைகேடு வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாதம் 24-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
அதையடுத்து நவாஸ் ஷெரீஃப் உடனடியாக கைது செய்யப்பட்டு, லாகூரிலுள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், சிறைச் சாலையில் அவரைப் பரிசோதித்த மருத்துவக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், நவாஸ் ஷெரீஃபின் உடல் நிலையில் பல குறைபாடுகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு, கைகளில் வலி, இரவு நேரங்களில் கால்கள் மரத்துப் போவது ஆகிய பிரச்னைகள் உள்ளன.
மேலும், ரத்தக்கட்டு ஏற்படுவதைத் தடுப்பதற்கான மருந்துகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட சக்தி வாய்ந்த மருந்துகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவர் தற்போது பிஐசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.