வாஷிங்டன்: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில், சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க முட்டுக்கட்டைப் போட்ட சீனா மீது அமெரிக்கா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானைக் காப்பாற்றும் பொறுப்பு அல்ல, பாகிஸ்தானை பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைப்பதே சீனாவின் பொறுப்பாகும் என்று அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அதிகாரி கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தன. ஆனால், இந்த முடிவுக்கு சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, முட்டுக்கட்டை போட்டதால், 4வது முறையாக இந்தியாவின் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.