டாக்கா: கேமராவை உற்று நோக்கும் வங்கதேச கட்டுமானத் தொழிலாளரின் புகைப்படம் ஒன்று சமுக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியுள்ளது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் அபெதின்மங். இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடந்த 21-ஆம் தேதி பச்சைக் கண்களுடன் கேமராவை உற்று நோக்கும் சிற்பம் போல் அமைந்த இளைஞர் ஒருவரின் புகைப்படமொன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்தாவது:
இந்தப் புகைப்படமானது கோலாலம்பூரில் உள்ள கட்டுமான தளம் ஒன்றில் எடுக்கப்பட்டது. இந்த இளைஞர் வங்கதேசத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர். அவர் மிகவும் வெட்கப்பட்டார். படத்தை எடுத்தது அலைபேசி என்பதால் அவருக்கு எங்கு பார்ப்பது என்றே தெரியவில்லை. நான் அவருக்கு கேமராவைப் பலமுறை சுட்டிக் காட்டினேன். நிறைய ஷாட்டுகள் எடுக்கப்பட்டது. ஆனால் அவை நன்றாக இல்லை. கடைசியாக அவர் கேமராவை நேருக்கு நேராக பார்த்த போது இது எடுக்கப்பட்டது. நன்றாக இருக்கிறது இல்லையா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகைப்படமானது இதுவரை 24,500 பேரால் ரீ ட்வீட் செய்யப்பட்டிருப்பதுடன், 68,700 பேர் லைக் செய்துள்ளார்கள். இதனால் இது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்தத் தகவலை வங்கதேசத்திலிருந்து வெளிவரும் 'டெய்லி ஸ்டார் பங்களாதேஷ்' செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.