அடுத்த 7 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் இரு மடங்காக உயரும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்தார்.
புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதன் காரணமாக, வரும் 2024ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி இரு மடங்கு அதிகரித்து 5 லட்சம் கோடி டாலரை எட்டும். மேலும், அடுத்த பத்து ஆண்டுகளில் பொருளாதாரம் 7 லட்சம் கோடி டாலரை எட்டி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வளம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும்.
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரம் 10 லட்சம் கோடி டாலர் என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைக்கும். 21ஆம் நூற்றாண்டு மத்திய காலகட்டத்துக்குள்ளாக பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவை இந்தியா விஞ்சிவிடும் என்று முகேஷ் அம்பானி உறுதிபடத் தெரிவித்தார்.