மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் கரடியின் ஆதிக்கம் காணப்பட்டது. இதன் காரணமாக, சென்செக்ஸ் 316 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் பொருளாதரா வளர்ச்சி மூன்றாண்டு சரிவிலிருந்து மீண்டு 6.3 சதவீதமாக அதிகரித்த நிலையிலும், நாட்டின் நிதிப் பற்றாக்குறை 96.1சதவீதத்தை எட்டிவிட்டது என்ற நிலைப்பாட்டால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே காணப்பட்டது. நண்பகலுக்குப் பிறகான வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர்.
இதையடுத்து ரியல் எஸ்டேட் துறை பங்குகளின் விலை 1.99 சதவீதமும், உலோகம் 1.75 சதவீதமும், அடிப்படைக் கட்டமைப்பு 1.63 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு துறை பங்குகளின் விலை 1.47 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், அதானி போர்ட்ஸ் பங்கின் விலை 3 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 2.99 சதவீதமும், பார்தி ஏர்டெல் 2.47 சதவீதமும் சரிந்தன. மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 316 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 32,832 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 104 புள்ளிகள் சரிந்து 10,121 புள்ளிகளாக நிலைத்தது.