வோல்வோ நிறுவனம் புதிய 'எக்ஸ்சி60' என்ற சொகுசுக் காரை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து வோல்வோ ஆட்டோ இந்தியா நிர்வாக இயக்குநர் சார்லஸ் ஃப்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வோல்வோவின் புதிய 'எக்ஸ்சி60' கார் தனித்துவமான அம்சங்களை உள்ளடக்கியது. நவீன ஸ்காண்டிநேவியன் வடிவமைப்பு மற்றும் அதில் இடம்பெற்றுள்ள சொகுசு வசதிகள் வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும். உலக அளவில் வோல்வோ நிறுவனம் அதிகம் விற்பனை செய்யும் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவிலும் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
பாதசாரிகள், மோட்டார் சைக்கிளில் செல்வோர் ஆகியோரை கண்டறிந்து எச்சரிப்பது உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இப்புதிய காரில் இடம்பெற்றுள்ளன. இவை தவிர, ஏர் சஸ்பென்ஷன், காருக்குள் அதி நவீன குளிர்சாதன வசதி, முன் இருக்கை பயணிக்கு காற்றோட்டம் உள்ளிட்ட சகல வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை ரூ.55.9 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் மட்டும் 2,000 கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய நிலையில், வோல்வோ நிறுவனத்துக்கு நாடு முழுவதும் உள்ள 19 விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.