டாடா குழும நிறுவனங்களின் பங்குதாரர்கள் நலன் பாதுகாக்கப்படும் என டாடா சன்ஸின் புதிய தலைவராக பொறுப்பேற்ற என். சந்திரசேகரன் உறுதியளித்தார்.
ரூ.7 லட்சம் கோடி மதிப்பில் உப்பு முதல் மென்பொருள் வரையில் அனைத்து துறைகளிலும் சர்வதேச அளவில் கோலோச்சியுள்ள டாடா நிறுவனங்கள் அனைத்தின் மேம்பாட்டாளர் பங்குகளையும் டாடா சன்ஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதன் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த என். சந்திரசேகரன் கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர், மும்பையில் உள்ள டாடா நிறுவன தலைமையகமான "பாம்பே ஹவுஸில்' செவ்வாய்க்கிழமை முறைப்படி தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
150 ஆண்டு கால பாரம்பரியமிக்க டாடா குழுமத்தின் வரலாற்றில் பார்சி இனத்தைச் சேராத ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்பது இதுவே முதல் முறை.
புதிய தலைவராக சந்திரசேகரன் பொறுப்பேற்ற பிறகு பணியாளர்களிடையே பேசியதாவது:
டாடா குழும நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பாடுபடவேண்டும். பல துறைகளில் முன்னோடியாகத் திகழும் நமது நிறுவனங்கள் யாரையும் பின்பற்றாமல் பிறருக்கு வழிகாட்டியாகவே திகழ வேண்டும். அதற்குத் தேவையான அனைத்துவித ஊக்கங்களும் தரப்படும். அனைவரையும் வழிநடத்திச் செல்லும் திறன் நம்மிடம் உள்ளது.
டாடா நிறுவனங்கள் அனைத்துக்கும் தேவையான, முறையான அளவில் மூலதனம் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், பங்குதாரர்களின் நலன்களை பேணிக்காப்பதோடு, அவர்களின் முதலீட்டின் மதிப்பை அதிகரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நன்றாக ஆராய்ந்து, அவர்களுக்கு முழுமையாகப் பொருந்தும் சேவை மற்றும் தயாரிப்புகளைத் தொடர்ந்து அளிக்க வேண்டும். அப்போதுதான் நாம் விரும்பிய இலக்கை அடைய முடியும் என்று சந்திரசேகரன் தெரிவித்தார்.