தனியார் துறையைச் சேர்ந்த யெஸ் வங்கி, பசுமை உள்கட்டமைப்பு கடன் பத்திர வெளியீட்டின் மூலம் ரூ.330 கோடி மூலதனம் பெற்றது.
இதுகுறித்து யெஸ் வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பசுமை உள்கட்டமைப்பு கடன் பத்திரங்கள் மூலம் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான மூலதனத்தைப் பெற முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, அந்த வகை கடன் பத்திரங்களைத் தனியார் நிதி நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்து ரூ.330 கோடி திரட்டப்பட்டது என்று யெஸ் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பசுமை உள்கட்டமைப்பு கடன் பத்திரங்கள் 7 ஆண்டுகள் முதிர்வு காலத்தைக் கொண்டவை. இதற்கான ஆண்டு வட்டி விகிதம் 7.62 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இக்கடன் பத்திரங்கள் பட்டியலிடப்படும்.