கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் கடன் பத்திர வெளியீடுகள் மூலம் ரூ.5.95 லட்சம் கோடியை திரட்டிக் கொண்டுள்ளன.
இதுகுறித்து செபி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2016-இல் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான கால அளவில் இந்திய நிறுவனங்கள் தனியார் நிதி நிறுவனங்களுக்கு கடன் பத்திரங்களை ஒதுக்கீடு செய்ததன் மூலம் ரூ.5,95,627 கோடி மூலதனத்தை பெற்றன. கடந்த 2015-ஆம் ஆண்டில் இதே வழிமுறையில் திரட்டிய தொகை ரூ.4,76,311 கோடியுடன் ஒப்பிடும் போது இது 25 சதவீதம் அதிகமாகும். 2016-இல் நிறுவனங்கள் மேற்கொண்ட மொத்த கடன் பத்திர வெளியீடுகளின் எண்ணிக்கை 3,366 ஆகும். 2015-ஆம் ஆண்டில் இது 2,953-ஆக காணப்பட்டது.
சென்ற ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்திய நிறுவனங்கள் 375 கடன்பத்திர வெளியீடுகள் மூலம் ரூ.71,165 கோடியை திரட்டியதாக செபி புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நிறுவனங்கள் விரிவாக்க திட்டங்களுக்காகவும், நடைமுறை மூலதன தேவைகளுக்காகவும், கடன் பத்திர வெளியீட்டில் இறங்கி நிதி திரட்டியுள்ளன.