உயர் மதிப்பு கரன்ஸி நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதன் எதிரொலியாக, குறுந்தொழில் மேம்பாடு மற்றும் மறுநிதியளிப்பு முகமையின்
(முத்ரா வங்கி) கீழ் வழங்கப்படும் கடன் மூன்றாவது காலாண்டில் சரிவைக் கண்டுள்ளது. இதுகுறித்து முத்ரா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியான ஜிஜி மம்மன் சனிக்கிழமை கூறியதாவது:
நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத கால அளவில் முத்ரா வங்கி ரூ.80,000 கோடி மதிப்பிலான கடன்களை
தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியது. ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பான பிரச்னைகளால் கடந்த இரண்டு மாதங்களாக கடன் வழங்கும் நடவடிக்கைகளில்
தொய்வு ஏற்பட்டது. இல்லையெனில், முத்ரா வங்கி வழங்கிய கடன் அனைவரும் உற்றுநோக்கும் அளவுக்கு இதைவிட கணிசமான அளவில் அதிகரித்திருக்கும்.
நடப்பு நிதி ஆண்டில் ரூ.1.8 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை நிச்சயம் அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் (பிஎம்எம்ஒய்) கீழ் சிறுதொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்க ரூ.5,000 கோடி தொகுப்பு நிதியில் முத்ரா வங்கி உருவாக்கப்பட்டது.
பிஎம்எம்ஒய் திட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளில் கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சிஷு பிரிவில் ரூ.50,000 வரையிலும், கிஷோர் பிரிவில்
ரூ.50,000-ரூ.5 லட்சம் வரையிலும், தருண் பிரிவில் ரூ.5 லட்சம்-ரூ.10 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது.