பிலிம் சுருள் தயாரிப்பில் மீண்டும் களமிறங்க உள்ளதாக கோடாக்கின் துணை நிறுவனமான கோடாக் அலரிஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
புகைப்பட கலைஞர்களிடையே "எக்டாக்ரோம்' கலர் ஃபிலிம்களுக்கான தேவை குறைந்து போனதையடுத்து அதன் விற்பனை மிகவும் வீழ்ச்சியடைந்தது. இதையடுத்து, அந்த வகை ஃபிலிம் உற்பத்தி கடந்த 2012-ஆம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது அனலாக் போட்டோகிராபி முறை மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக, "எக்டாக்ரோம்' போன்ற பாரம்பரிய ஃபிலிம்களுக்கான தேவை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே அந்த வகை ஃபிலிம் விற்பனை நிலையான அளவில் அதிகரித்து வருகிறது.
புகைப்படத் தொழிலில் ஆர்வம் உள்ள கலைஞர்கள் ஃபிலிம் பயன்படுத்தி புகைப்படம் எடுப்பதில் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு கோடாக் அலரிஸ் நிறுவனம், எக்டாக்ரோம் ஃபிலிம் உற்பத்தியை மீண்டும் தொடங்க முடிவெடுத்துள்ளது. எக்டாக்ரோம் பிலிம் வகையானது, இ-6 ரசாயன முறையில் புராசஸ் செய்யப்படும்.
எக்டாக்ரோம் டிரான்பேரன்ஸி ஃபிலிம் மூலம் எடுக்கப்படும் படங்கள் மிகவும் தெளிவான வண்ணத்துடனும், நேர்த்தியாகவும் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.