நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் மூன்றாம் காலாண்டில் ரூ.3,708 கோடி லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான விஷால் சிகா வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம் ரூ.17,273 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.15,902 கோடியுடன் ஒப்பிடும்போது இது 8.6 சதவீத வளர்ச்சியாகும்.
இதையடுத்து, நிறுவனத்தின் லாபம் ரூ.3,465 கோடியிலிருந்து 7 சதவீதம் அதிகரித்து ரூ.3,708 கோடியாக இருந்தது.
டாலர் அடிப்படையில் வருவாய் 6 சதவீதம் உயர்ந்து 250 கோடி டாலராகவும், லாபம் 4.4 சதவீதம் அதிகரித்து 54.7 கோடி டாலராகவும் காணப்பட்டது.
மூன்றாவது காலாண்டில், இடைக்கால ஈவுத்தொகை, வரி உள்ளிட்டவற்றுக்கான செலவினம் ரூ.3,029 கோடியாக இருந்தது.
டிசம்பர் இறுதி நிலவரப்படி இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 1.99 லட்சமாகும்.
மூன்றாவது காலாண்டில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையிலும் சிறப்பான செயல்பாடுகளால் வருவாய் வளர்ச்சி எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இருந்தது என்றார் அவர்.