லார்சன் & டூப்ரோ (எல் & டி) நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.972 கோடியாக இருந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டின் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் எல் & டி நிறுவனத்தின் வருவாய் ரூ.26,286.98 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.25,928.07 கோடியாக காணப்பட்டது.
செலவினம் ரூ.24,170 கோடியிலிருந்து சற்று அதிகரித்து ரூ.24,486.57 கோடியாக காணப்பட்டது.நிகர லாபம் ரூ.700.34 கோடியிலிருந்து 38.85 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.972 கோடியாக காணப்பட்டது.
மூன்றாவது காலாண்டில் நிறுவனத்துக்கு ரூ.34,885 கோடி மதிப்பிலான புதிய பணி ஆணைகள் பெறப்பட்டன. இதில், சர்வதேச பணி ஆணைகளின் மதிப்பு ரூ.11,865 கோடியாகும் (34%).இதையடுத்து, நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் பெற்ற மொத்த பணி ஆணைகளின் மதிப்பு ரூ.95,706 கோடியாக இருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணி ஆணைகளின் மதிப்பு ரூ.2,58,585 கோடியாக உள்ளது. கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 1.4 சதவீதம் அதிகமாகும். இதில், சர்வதேச அளவிலான பணி ஆணைகளின் மதிப்பு 29 சதவீதமாகும் என்று எல் & டி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.