பொதுக் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் வரும் டிசம்பர் மாதத்துக்குள் பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறது.
மத்திய அரசுக்கு சொந்தமான ஐந்து பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மிகப் பெரியதாகும்.
இந்தியாவில் பொதுக் காப்பீட்டு துறையில் கோலோச்சி வரும் இந்த நிறுவனம் பொதுப் பங்கு வெளியீடு மேற்கொள்ள அனுமதி கோரி செபியிடம் விரைவில் விண்ணப்பிக்க உள்ளது.
சந்தை நிலவரம் சாதகமாக இருக்கும்பட்சத்தில், பங்கு வெளியீட்டு நடவடிக்கைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்கிறார் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ஜி. ஸ்ரீநிவாஸன்.
பொதுத் துறையைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவனமொன்று பங்கு வெளியீட்டில் களமிறங்கி நிதி திரட்டுவது இதுவே முதல் முறை.
பொதுக் காப்பீட்டுத் துறையில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் 16 சதவீத சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் சென்ற நிதி ஆண்டில் ரூ.1,008 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவைக் குழு கடந்த ஜனவரி மாதம் வழங்கியது.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், மறுகாப்பீட்டு சேவை வழங்கும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய ஐந்து பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் மத்திய அரசுக்கு 100 சதவீத பங்கு மூலதனம் உள்ளது. இதில், குறிப்பிட்ட அளவு பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.11,000 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளது.