பொதுத் துறையைச் சேர்ந்த ஆந்திரா வங்கி இரண்டாவது காலாண்டில் ரூ.385 கோடி இழப்பைக் கண்டது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டின் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ஆந்திரா வங்கியின் வருவாய் ரூ.5,005 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.5,043 கோடியுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும். நிகர வட்டி வருவாய் வரம்பு 3.21 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
வாராக் கடனை எதிர்கொள்ள கடந்த ஆண்டில் ரூ.992 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது அதற்காக ரூ.1,680 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கடந்த நிதி ஆண்டில் வங்கி ரூ.51 கோடி லாபம் ஈட்டியிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் ரூ.385 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது.
மொத்த வாராக் கடன் ரூ.16,263 கோடியிலிருந்து (11.49 சதவீதம்) அதிகரித்து ரூ.19,839 கோடியாக (13.27 சதவீதம்) இருந்தது. நிகர வாராக் கடன் ரூ.9,411 கோடியிலிருந்து (6.99 சதவீதம்) உயர்ந்து ரூ.10,574 கோடியாக (7.55 சதவீதம்) இருந்தது என்று ஆந்திரா வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.