டயர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள எம்.ஆர்.எஃப். நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 22.15 சதவீதம் சரிந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் எம்.ஆர்.எஃப். நிறுவனம் ரூ.3,660.22 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.3,736.70 கோடியுடன் ஒப்பிடும்போது இது குறைவான அளவாகும். செலவினம் ரூ.3,170.99 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,219.30 கோடியானது.
வருவாய் குறைந்தது மற்றும் செலவினம் அதிகரித்ததையடுத்து, நிகர லாபம் ரூ.385.29 கோடியிலிருந்து 22.15 சதவீதம் சரிந்து ரூ.299.92 கோடியானது.
வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ள நிதி ஆண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.3 இடைக்கால ஈவுத்தொகை வழங்க முடிவு செய்துள்ளதாக எம்.ஆர்.எஃப். பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.