பொதுத் துறையைச் சேர்ந்த அலகாபாத் வங்கியின் இரண்டாம் காலாண்டு லாபம் 7.9 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான உஷா அனந்தசுப்ரமணியன் தெரிவித்ததாவது:
செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் அலகாபாத் வங்கி ரூ.5,067.78 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.5,051.61 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்.
நிகர லாபம் ரூ.65.03 கோடியிலிருந்து 8 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.70.20 கோடியானது.
வங்கி வழங்கிய கடனில், மொத்த வாராக் கடன் விகிதம் 12.28 சதவீதத்திலிருந்து 14.10 சதவீதமாக அதிகரித்தது. நிகர வாராக் கடன் விகிதம் 8.59 சதவீதத்திலிருந்து 8.84 சதவீதமானது. வாராக் கடன் அதிகரிப்பையடுத்து அதற்காக ஒதுக்கப்படும் இடர்பாட்டுத் தொகை ரூ.692.08 கோடியிலிருந்து இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.1,469.52 கோடியானது.
நுண் மற்றும் சிறிய தொழில்துறையினர், விவசாயிகள், சில்லறை வர்த்தகர்கள் உள்ளிடோருக்கு கடன் வழங்குவதில் அதிக அளவு முனைப்பு காட்டி வருகிறோம் என்றார் அவர்.