கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் சாதனை அளவிலிருந்து சரிந்து முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சவூதி அரேபியாவில் 10க்கும் மேற்பட்ட இளவரசர்கள் ஒரே நேரத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன், இதன் தாக்கத்தால் கச்சா எண்ணெய் விலை 3.5 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. இதனால், பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என்ற நிலைப்பாட்டால் முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது.
இந்த நிலையில், நுகர்வோர் சாதனங்கள், மோட்டார் உதிரிபாகங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட துறை தயாரிப்புகளுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. அதன் எதிரொலியாக, பங்குச் சந்தை சரிவிலிருந்து ஓரளவு மீண்டது.
மருந்து துறை நிறுவன பங்குகளின் விலை 4.62 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு துறை பங்குகளின் விலை 3.30 சதவீதமும் சரிந்தன. அதேசமயம், நுகர்வோர் சாதன துறை பங்குகளின் விலை 10.33 சதவீதமும், தகவல்தொழில்நுட்பத் துறை நிறுவன பங்குகளின் விலை 3.37 சதவீதமும் அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 371 புள்ளிகள் சரிந்து 33,314 புள்ளிகளில் நிலைத்தது. இப்பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.37,433.79 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 130 புள்ளிகள் குறைந்து 10,321 புள்ளிகளில் நிலைத்தது. இப்பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.1,80,596.80 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.