ரிலையன்ஸ் பவர் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் ரூ.273.13 கோடி நிகர லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பருவகாலத்தையொட்டி மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் நிலக்கரி சுரங்கங்களில் ஏராளமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது. இதன் காரணமாக, நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது (ஜூலை-செப்டம்பர்) காலாண்டில், நிறுவனத்தின் மின் உற்பத்தி சரிவடைந்தே இருந்தது.
இதையடுத்து, கடந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்துக்கு ரூ.2,562.25 கோடி வருவாய் கிடைத்த நிலையில், நடப்பு ஆண்டில் இது 2,379.68 கோடியாக குறைந்து போனது. அதேசமயம், நிகர லாபம் ரூ.272.07 கோடியிலிருந்து சற்று அதிகரித்து ரூ.273.13 கோடியாக இருந்தது.
அனல் மற்றும் இதர மின் உற்பத்தி பிரிவுகளிலான மின் உற்பத்திக்கான தேவை குறைந்து போனதையடுத்து, நீர்மின் உற்பத்தி இரண்டாவது காலாண்டில் சூடுபிடித்து காணப்பட்டது என ரிலையன்ஸ் பவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.