இந்திய பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் மிகுந்த விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதையடுத்து, சென்செக்ஸ் கடந்த ஒருவாரத்துக்குப் பிறகு அதிகபட்ச அளவை எட்டியது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததன் எதிரொலியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை மூன்று வர்த்தக தினமாக சரிவை சந்தித்து வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அந்நிறுவனப் பங்குகளின் விலை 2.27 சதவீத அளவுக்கு உயர்ந்தது. இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகளுக்கும் முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு காணப்பட்டன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 346 புள்ளிகள் அதிகரித்து 33,107 புள்ளிகளில் நிலைத்தது. கடந்த நவம்பர் 10ஆம் தேதிக்குப் பிறகு காணப்படும் அதிகபட்ச அளவாகும் இது.
தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 96 புள்ளிகள் உயர்ந்து 10,214 புள்ளிகளாக நிலைத்தது.