பிஎஸ்-6 தரக்கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட என்ஜின்களை தயாரிப்பதற்காக ஜப்பானைச் சேர்ந்த ஹினோ நிறுவனத்துடன் உடன்படிக்கை மேற்கொண்டுள்ளதாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஹினோ நிறுவனத்தின் என்ஜின் தொழில்நுட்பத்தை அசோக் லேலண்ட் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக இரு நிறுவனங்களுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் யூரோ-6 தரக்கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும், சர்வதேச செயல்பாடுகளுக்காக ஹினோ என்ஜின் பாகங்களை இந்தியாவில் வாங்குவதற்கும் வழி வகுக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து ஹினோ மோட்டார்ஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் யோஷியோ ஷிமோ தெரிவித்ததாவது:
இந்த கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் இரு நிறுவனங்களுக்கிடையிலான உறவு மேலும் வலுப்படும். அசோக் லேலண்ட் நிறுவனம் இந்தியாவில் என்ஜின் பாகங்களை கொள்முதல் செய்வது என்பது ஹினோ நிறுவனத்தின் உலகளாவிய போட்டித் தன்மை அதிகரிக்க உதவும் என்றார் அவர்.
என்ஜின்களை தயாரிப்பதற்காக, ஹினோ மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனங்கள் 1986ஆம் ஆண்டு முதல் இணைந்து செயல்பட்டு வருகின்றன. தற்போது மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் டீசல் என்ஜின் தயாரிப்பில் இரு நிறுவனங்களும் பயனடையும்.