இந்திய ஜவுளித் துறையில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு கடந்த இரண்டு ஆண்டுகளில் மும்மடங்கு அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கடந்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான கால அளவில் இந்திய ஜவுளித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் மேற்கொண்ட முதலீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
செயற்கை இழை தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் நிச்சயம் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அத்துறையினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கும். அந்த துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கத் தேவையான என்னென்ன சலுகைகளை அளிப்பது, குறைந்த விலையில் பொருள்களை உற்பத்தி செய்வது எவ்வாறு என்பது குறித்து அந்த குழு பரிசீலித்து வருகிறது என்றார் அவர்.